Friday, August 10, 2007



ரஜினி சினிமாவில் சம்பாதித்து சொந்தமாக வீடு கட்டிக் கொண்டது முதலில் சென்னையில்தான். இங்குள்ள தமிழ்ப் பெண் லதாவை கலப்புமணம் புரிந்து தானும் ஒரு தமிழராக குடும்பத்தோடு ரஜினி இங்கு வசித்து வருகிறார். தமிழகம் வந்து இருபது வருடங்களுக்குப் பின்பு இப்போதுதான் இவர் பெங்களூரில் பிளாட் ஒன்று வாங்கியிருக்கிறார்.


-


"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையுமசொல்லும். உங்க பேரை ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும், துள்ளும்" என்று "ராஜா சின்ன ரோஜா" படத்தில் ரஜினியைப் பற்றி பாடல் வரிகள் உண்டு. அதில் எள்ளளவும் மிகையில்லை என்பதற்கு நமது வீட்டுக் குழந்தைகளே சாட்சி. அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இன்று ரஜினியின் பெயரைச் சொன்னால் போதும். சோறு ஊட்டுவதற்கும் ரஜினிதான் உதவிக்கு வருகிறார். வானில் தோன்றும் நிலவல்ல. இன்றைய வேகமான உலகில் திரையில் ரஜினியின் வேகம் பார்க்கும் எவருக்கும் அவர் காந்த சக்தியாகத் திகழுகிறார். அதற்கு வெறும் ஸ்டைல் மட்டுமே காரணமா? விடை காண முடியாத வினா அது. தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர். மாபெரும் சக்தியாக இருந்தவர். அவர் ஓர் அரசியல் இயக்கத்தைச் சார்ந்திருந்தாலும், அதற்கும் அப்பாற்பட்டு மக்களிடம் செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். தனது இமேஜுக்கு பாதகமில்லாமலேதான் அவர் வாழ்ந்தார். ஆனால் ரஜினியோ இதுவரை எந்த ஓர் அரசியல் இயக்கத்திலும் சார்புடையவராக இருந்ததில்லை. கடந்த சில தேர்தல் சமயங்களில் அறிக்கை அரசியல் மட்டுமே நடத்தியிருக்கிறார். நேரடி அரசியலுக்கு அவர் வந்ததில்லை. அதனால்தான் வீட்டுக்கு ஒரு ரஜினி ரசிகர் இருப்பது சாத்தியமாயிற்று போலும். 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகமாகி, 'மூன்று முடிச்சு' மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற ரஜினி மேலும் மேலும் ஏற்றம் கண்டு வருகிறாரே தவிர சிறு அணுவளவும் குன்றிவிடவில்லை. இந்திய திரையுலகம் காணாத சாதனை இது.





இந்த ரஜினியின் தாய்மொழி மராத்தி, பிறந்தத கர்நாடகம் என்றாலும் இளமையிலிருந்து 'தமிழ்ப்பால்' அருந்தி வளர்ந்தவர் அவர். தனக்கு ஆதரவு கரம் நீட்டிய தமிழ்நாட்டில்தான் ரஜினியின் உயிரும், மூச்சும் இருக்கிறது. அதனால்தான் தமிழ் மக்களால் தனக்குக் கிடைத்த அபரிமிதமான புகழைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யத் துடிக்கிறார் அவர்.




சினிமாவுக்கு அப்பாற்பட்டு ரஜினியிடம் பந்தா, வீண் பகட்டு எதுவும் கிடையாது. வெளிப்படையாக, எதையும் மனம் திறந்து பேசும் தனது தனித்தன்மையால் எம்.ஜி.ஆருக்குப் பின் திரையுலகிலும் நல்ல பெயரையே தேடிக் கொண்டிருக்கிறார். ரஜினி சினிமாவில் சம்பாதித்து சொந்தமாக வீடு கட்டிக் கொண்டது முதலில் சென்னையில்தான். இங்குள்ள தமிழ்ப் பெண் லதாவை கலப்புமணம் புரிந்து தானும் ஒரு தமிழராக குடும்பத்தோடு ரஜினி இங்கு வசித்து வருகிறார். தமிழகம் வந்து இருபது வருடங்களுக்குப் பின்பு இப்போதுதான் இவர் பெங்களூரில் பிளாட் ஒன்று வாங்கியிருக்கிறார்.


-


-------------------------------------------------------------------------------------------------








நாம் சற்று பெங்களூருக்குச் சென்று ரஜினியின் ஆரம்ப கால வாழ்க்கையை அறிந்து வருவோம்.


-
சிவாஜி
-
ரஜினியின் உடன் பிறப்புகளெல்லாம் இன்றைக்கும் பெங்களூரிலேயே அவர்களது பூர்வீக வீட்டிலேயே (மாற்றியமைக்கப்பட்டது) வசித்துக் கொண்டு அவரவர் பணிகளைச் செய்து வருகிறார்கள். ரஜினியின் தந்தை ரானோஜி ராவ். தாயார் ராம்பாய் (இருவரும் இப்போது இல்லை). இவர்களுக்கு ஒரு மகள், மூன்று மகன்கள் என்று மொத்தம் நான்கு வாரிசுகள். வீட்டுக்கு மூத்தவர் அஸ்வத் பாலுபாய், அவரையடுத்து சத்யநாராயண ராவ். பெங்களூர் மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவில் சூப்பர்வைசராகப் பணிபுரிகிறார். நாகேஷ்ராவ் (உயிரோடு இல்லை). அடுத்து கடைக்குட்டி சிவாஜிராவ் கெய்க்வாட் (ரஜினிகாந்த்). இப்போதும் ரஜினியை அவரது உடன் பிறப்புகள் 'சிவாஜி' என்றுதான் அன்புடன் அழைக்கிறார்கள். வெளி மனிதர்களிடம் மட்டும் 'ரஜினிகாந்த்' என்று குறிப்பிடுகிறார்கள். ரஜினியின் தனித் தன்மைகளில் ஒன்று அவரது அடக்கம். அதில் அவரிடம் மாறுபாடே காணமுடியாது, எந்த நிலையிலும். அது போலவே பெங்களூரில் அவரது குடும்பத்தினரும் உள்ளனர். பெங்களூர் சென்று ரஜினி குடும்பத்தினரைச் சந்தித்தபோது அவர்களும், அவர்களது இருப்பிடமும் ரஜினியைவிட அடக்கம் என்றால் அதை அடக்கமாக விவரிப்பது என்றால் முடியாது.


-


------------------------------------------------------------------------------------------------


-






ரஜினியின் வீடு


-




பரபரப்பான பெங்களூர் மாநகரத்தின் அனுமந்தா நகரில் நடுத்தர மக்கள் வசிக்கும் இடத்தில் இருக்கிறது ரஜினியின் வீடு. ரஜினி பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இந்த வீட்டில்தான். ரஜினியின் தந்தை ரானோஜிராவ் போலீஸ்காரராகப் பணிபுரிந்தவர். அவர் ஓய்வு பெற்றபோது 3 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அதில் 800 ரூபாய்க்கு இப்போதிருக்கும் இடத்தை (அரை கிரவுண்டுக்குக் குறைவானது) வாங்கி மீதிப் பணத்தில் வீட்டைக் கட்டி முடித்தார். மாதந்தோறும் அவருக்கு வந்த ஓய்வூதியம் 30 ரூபாய் மட்டுமே. இது படிப்படியாக அதிகரித்து 160 ரூபாயானது. 2 ஆயிரம் ரூபாய் செலவு செய்து 300 சதுர அடியில் சிறிய வீடொன்றைக் கட்டினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் நாம் பெங்களூர் சென்றிருந்தபோது, அந்த வீட்டைச் சுற்றிக் காட்டிய ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ், "எனக்குத் திருமணம் நடந்தது இந்த வீட்டில்தான். திருமணம் நடந்தபின் படுக்கையறையை எனக்கு ஒழித்துக் கொடுத்தார்கள்" என்றார்.




வீட்டின் பின்புறம் இருந்த அந்தக் காலி நிலத்தில் ரஜினியின சகோதரர்களால் 1977-ல் சிறிய, நவீன கட்டிடமொன்று எழுப்பப்பட்டது.


அந்தப் புதிய கட்டிடத்திற்கு ரஜினி ஆரம்ப கட்டத்தில் பண உதவி செய்திருக்கிறார். அடுத்த சில ஆண்டுகளில் கடன் வாங்கி முதல் மாடியைக் கட்டினார் சத்யநாராயணராவ். "என்னால் முடியாத விஷயங்களுக்குத்தான் ரஜினியைத் தேடிப் போவேன் அதே நேரத்தில் நான் என்ன உதவி கேட்டாலும் உதவுவதற்குத் தயாராக இருப்பார் ரஜினி" என்ற சத்யநாராயணராவ் ரஜினியை 'அவர்' 'இவர்' என்று மரியாதையுடனேயே குறிப்பிடுகிறார்.




தந்தை ரானோஜிராவ் இறந்தபின், அவர் கட்டிய வீடு என்பதால் பழைய வீட்டை இடித்து விடாமல் நினைவு இல்லமாக வைத்திருந்தார்கள். ஓடு வேய்ந்த அந்தப் பழைய வீட்டில் ஓடுகளெல்லாம் இற்றுப் போனதால், அதற்கு மேலே சிமெண்ட் கூரைத் தகடுகளைப் பொருத்தி அதுவும் மழைக்கு ஒழுகும் நிலையில் இருந்ததால் அங்கங்கே ஒட்டைகளை மறைத்து காற்றினால் கூரை பறந்து விடாமலிருக்க கல், செங்கற்களை வைத்திருந்தார்கள். சுவர்கள் மண்ணால் எழுப்பப்பட்டிருந்ததால் எந்த நேரத்திலும் இடிந்து விழக் கூடிய நிலையில் இருந்தது. மேலும் தனது குடும்பத்திற்கு இடம் போதாத நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன்புதான் சத்யநாராயணராவ் பழைய வீட்டை இடித்துப் புதிதாக மற்றொரு வீட்டைத் தனது சொந்த செலவிலேயே கட்டி முடித்தார். இந்தப் புதிய வீட்டில் தனது பூர்வீக நினைவுகளோடு மனைவியுடன் வசிக்கிறார்.




பழைய வீட்டில் 'ஆர்.எஸ்.ராவ் அண்ட பிரதர்ஸ்' (ஆர் என்றால் ரஜினிகாந்த் 'எஸ்' என்றால் சத்யநாராயணராவ்) என்ற சிறிய ஆங்கிலப் பெயர்ப் பலகை இருந்தது. 1977-ல் கட்டப்பட்ட புதிய வீட்டில் பளிங்குக் கல்லில் 'ஓம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி நிலையம்' 'ரஜினிகாந்த் அண்டு பிரதர்ஸ்' என்ற கன்னடத்தில் பொறித்திருக்கிறார்கள். பழைய வீட்டை இடித்து புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில் 'ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிரசன்ன, ஸ்ரீமதி ராம்பாய், ஸ்ரீ ரானோஜி ராவ் கெய்க்வாட் அண்டு சன்ஸ்' என்று பளிங்குக் கல்லில் கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.


-


------------------------------------------------------------------------------------------------


-






நினைவுச் சின்னம்


-




'பாட்சா' படப்பிடிப்பு பெங்களூரில் நடந்தபோது புதிதாகக் கட்டப்பட்ட வீட்டை ரஜினி வந்து பார்த்தாராம். அதற்குமுன் சத்யநாராயணராவ் ரஜினியிடம் 'பழைய வீட்டை இடிக்கப் போகிறேன்' என்ற தகவலைச் சொல்லியிருக்கிறார். அதற்கு ரஜினி, "நம் அம்மா, அப்பா நினைவாக இருந்துட்டுப் போகட்டுமே, இடிக்க வேணுமா?" என்று கேட்டிருக்கிறார். "பழைய வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனால் அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கும் தொந்தரவு" என்று ரஜினியின் ஒப்புதலையும் பெற்று பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டினாராம். புது வீட்டைப் பார்த்த ரஜினி, 'நன்றாக இருக்கிறது' என்று பாராட்டி விட்டுப் போனாராம். பெங்களூரில் ரஜினி குடும்பத்தினர் பேசும் மொழி மராத்தி. நம்மிடம் கொச்சைத் தமிழில் பேசினார் சத்யநாராயணராவ். ரஜினியின் குடும்பத்தில் சத்யநாராயணராவ் மட்டுமே சரளமாகத் தமிழில் பேசுகிறார். வீட்டுக்கு வந்தாலும் ரஜினி மராத்தியில்தான் பேசுவாராம்.


-


-------------------------------------------------------------------------------------------------






ரஜினி தமிழரே


-




ரஜினியின் குடும்பத்திற்குப் பூர்வீகம் மகாராஷ்டிர மாநிலம் என்றாலும், அவரது மூதாதையர் குடியேறி வம்சாவழியினரைப் பெருக்கியது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியிலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ள நாச்சிக்குப்பம் என்ற இடத்தில். அதைத்தான் ரஜினி, ராகவேந்திரா திருமண மண்டபத் திறப்பு விழாவில் குறிப்பிட்டுப் பேசினார். அதனால் ரஜினியின் பூர்வாசிரமத்தை ஆராய விரும்பும் அரசியல்வாதிகள் அந்தப் பக்கம் போகமாட்டார்கள் என்று நம்புகிறோம்.


-


-------------------------------------------------------------------------------------------------






ராகவேந்திரர்


-




ரஜினி எப்படி ராகவேந்திரா சுவாமிகளின் தீவிர பக்தராக இருக்கிறாரோ, அதேபோல்தான் அவரது உடன்பிறப்புகளும். ரஜினியின் அண்ணன் நம்மிடம் பேசிக் கொண்டிருந்த வேளையில்கூட 'ராமகிருஷ்ணா' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார். வீட்டில் ஹாலையொட்டி சிறிய பூஜையறை உண்டு. அதில் மூன்று வேளையும் பூஜை நடத்துகிறார். ஹாலில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய கண்ணாடி ஷெல்பிற்குள் ராமாயணம், மகாபாரதம் உட்பட இதிகாசம், புராணம் என்று பக்தி மயமான நூல்களே அதிகம் உள்ளன. கலர் டி.வி., வீடியோ டெக்குடன். ரஜினியின் பெயரில் இந்த வீட்டில் ஒரு தொலைபேசியும் உண்டு.


-


-------------------------------------------------------------------------------------------------


இவரைப்பற்றின செய்திகள் வரும் இதழில் தொடரும்